உறவுக்காலம்
என் மனக்குளத்தின் மத்தியில்
கல் எறிந்து
நீரலைகள் நிற்கும் முன்
காணாமல் போனவளே !
பார்வை நிலைகொளல்களும்
வார்த்தை பரிமாற்றங்களுமாய்
மேகக்கூட்டத்தின் மத்தியில்,
வானவில்லின் வண்ணம் கொண்டு
எழுதப்பட்டதொரு ஒப்பந்தம்,
நூலறுந்த காற்றாடியாய்
இன்று தெருவோரம் கிடக்குதடி !
எதிர்பார்ப்புகள் என் உத்திரத்தில்
கட்டப்படும் சிலந்தி வலைகள்.
ஏமாற்றங்கள்
என் வீட்டு முன் அறையை
அலங்கரிக்கும் தோரணங்கள்.
சிந்தனைகளை
சிந்தனைகள் கொய்து செல்ல
மிச்சமாய் கிடக்கும்
பச்சையமற்ற பிரதேசங்களில்
சருகாகிக் கிடக்கும் உன் நினைவுகள்.
துவக்கத்துக்காய் நான் எழுதிய
கவிதை
முடிவுரையாய்
முகமற்றுப் போனது எப்படி ?
என் நிழலைத் தின்றது
இரவோ இல்லையோ,
தக்க வைத்துக் கொள்ளாதது
என் தவறு தான்.
விலகலுக்குப் பின் தான்
விளங்குகிறது.
வெட்டினால் வளர்வது
நகம் தான்,
அகம் அல்ல.